பழுதடைந்த பயணிகள் நிழற்குடை


பழுதடைந்த பயணிகள் நிழற்குடை
x
தினத்தந்தி 4 Aug 2023 9:15 PM GMT (Updated: 4 Aug 2023 9:16 PM GMT)

மழவன் சேரம்பாடியில் பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.1, 2 மற்றும் பத்துலைன்ஸ், பாலவாடிலைன்ஸ், காவயல், எடத்தால் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வேலை காரணமாகவும், மாணவர்கள் பள்ளி-கல்லூரிக்கும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பந்தலூர், ஊட்டி, கோவை பகுதிகளுக்கு மழவன் சேரம்பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து செல்கின்றனர். இந்த நிலையில் மழவன் சேரம்பாடி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் கசிந்து ஒழுகுகிறது. இதன் காரணமாக பயணிகள் நிழற்குடைக்கு உள்ளேயும் மழைநீரில் நனைந்தபடி பொதுமக்கள், மாணவர்கள் இருக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story