சாலையில் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்


சாலையில் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 29 Jun 2023 1:13 PM GMT (Updated: 30 Jun 2023 6:22 AM GMT)

ராணிப்பேட்டையில் சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

தோல் தொழிற்சாலைகள்

ராணிப்பேட்டை நகரம், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ராணிப்பேட்டை நகரத்திற்கு வேலைக்காக ஆற்காடு, விஷாரம், கலவை, திமிரி மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக இருசக்கர வாகனம், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். அதே போல பள்ளி, கல்லூரி வாகனங்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் வருவதால் முத்துக்கடையில் இருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலை எப்போதும் வாகனங்கள் நிறைந்து காணப்படுவது வழக்கம்.

கூட்டமாக திரியும் மாடுகள்

மாலை நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாடுகள் கூட்டமாக ரோட்டின் நடுவே நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி சார்பில், ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story