ஆபத்தான தரைமட்ட பாலம்

ஆபத்தான தரைமட்ட பாலம்
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி அருகே பெரும்பதி, கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூர் இடையே காட்டாறு ஓடுகிறது. இதன் குறுக்கே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இதன் வழியாக வாகனங்கள் தினமும் அதிகளவில் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பெரும்பதியில் இருந்து கோவை செல்லும் மக்கள் அந்த வழியில் எளிதில் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் விளைபொருட்களை கிணத்துக்கடவு சந்தைக்கு விரைவாக கொண்டு செல்ல முடிகிறது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலத்த மழை காரணமாக தரைமட்ட பாலத்தின் ஒரு பகுதி லேசாக சேதம் அடைந்தது. எனினும் அதன் வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் பாலம் மேலும் சேதம் அடைந்து வருகிறது. அத்துடன் பாலத்தின் ஓரத்தில் கற்கள் பெயர்ந்து, ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இது தவிர தடுப்பு கம்பிகளும் இ்ல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆற்றுக்குள் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. மேலும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே தரைமட்ட பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






