ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

ஆடி அமாவாசையை முன்னிட்டு பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கரூர்

ஆடி அமாவாசை

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும் இந்த தர்ப்பணம் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அதன்படி கரூரில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனையொட்டி காலை முதலே பலர் காவிரி ஆற்றுக்கு வந்து, புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு சென்றதும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நொய்யல்

இதேபோல் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், கடம்பங்குறிச்சி, வாங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.


Next Story