நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

ஆடி அமாவாசையையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

திருநெல்வேலி

ஆடி அமாவாசையையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நெல்லை மாவட்டத்திலும் இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அவர்கள் வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்து விட்டு புனித நீராடுவார்கள்.

தாமிரபரணி ஆற்றில்...

நேற்று ஆடி அமாவாசையையொட்டி நெல்லை குறுக்குத்துறை படித்துறை, சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சிலரே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் நாளான நேற்றும், ஆடி 31-ந்தேதியான ஆகஸ்டு 16-ந்தேதி என 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

மேலும் இந்த மாதத்தில் 2-வது வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் நல்லது என பெரும்பாலான ஜோதிடர்கள் தெரிவித்து இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஒரு சிலரே தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசையொட்டி சாலைகுமாரசாமி கோவில் முன்பு கிருஷ்ணகுமார் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பாபநாசம் படித்துறையிலும் மூதாதையர்களுக்கு பொதுமக்கள் சிலரே தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வழக்கம்போல் தான் பக்தர்கள் கூட்டம் இருந்தது.

1 More update

Next Story