தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு: வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மகள் தற்கொலை தந்தை போலீசில் பரபரப்பு புகார்


தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு:  வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மகள் தற்கொலை  தந்தை போலீசில் பரபரப்பு புகார்
x

தீக்குளித்த பட்டதாரி பெண் இறந்த வழக்கில், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகள் மனோன்மணி (வயது 29). பட்டதாரியான இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவருடன் கோபித்துக்கொண்டு மனோன்மணி கடந்த 7 மாதமாக பொன்னம்மாபேட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மனோன்மணி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ராமசாமி புகார் கொடுத்தார்.

அதில் மனோன்மணியிடம் கணவர் அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். இதனால் கணவரை பிரிந்து இங்கு வந்த அவர் மனவேதனையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார். எனவே அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி விசாரித்து வருகிறார். இதனிடையே மனோன்மணி சிகிச்சையின் போது பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story