மாமனார், மாமியார் அடுத்தடுத்து இறந்ததால் மருமகள் தற்கொலை


மாமனார், மாமியார் அடுத்தடுத்து இறந்ததால் மருமகள் தற்கொலை
x

ஆர்.கே.பேட்டை அருகே மாமனார், மாமியார் அடுத்தடுத்து இறந்ததால் மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் விளக்கணாம்பூடிபுதூர் கிராமத்தில் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது 65). இவரது மனைவி மணிமேகலை (56). 4 மாதங்களுக்கு முன்னால் மணிமேகலையின் மாமனார் அண்ணாமலை வயது மூப்பின் காரணமாக இறந்தார்.

அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் 13-ந்தேதி மாமியார் தேவயானை பரிதாபமாக இறந்தார். மாமனார், மாமியார் அடுத்தடுத்து இறந்ததால் மன உளைச்சலில் இருந்த மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துகொண்டார்.

உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணிமேகலை மகன் முத்துகுமார் (31) ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story