ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை- மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x

ஈரோட்டில் பட்டப்பகலில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை போனது. இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் பட்டப்பகலில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை போனது. இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆடிட்டர்

ஈரோடு குமலன்குட்டை கணபதிநகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 74). ஆடிட்டர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் கணவருடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதனால் துரைசாமியும், சுப்புலட்சுமியும் ஈரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை துரைசாமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள தனது அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். ஈரோடு நாடார்மேட்டில் உள்ள இவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடுவதற்காக சுப்புலட்சுமி காலை 11.30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.

150 பவுன் நகை

இந்தநிலையில் மதியம் 2.20 மணி அளவில் துரைசாமியும், சுப்புலட்சுமியும் வீட்டுக்கு திரும்பினர். இருவரும் கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டும், அதில் இருந்த 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது சமையல் அறைக்கு அருகில் உள்ள கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ராஜபிரபு, மோகனசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய் வீரா, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் சுவர், கதவு, இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

முககவசம் அணிந்து வந்த மர்ம நபர்

வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை போலீசார் சோதனையிட்டனர். அப்போது நீலநிற சட்டை, ஜீன்ஸ் அணிந்து வந்த ஒருவர், வீட்டின் பின்பக்கம் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதிப்பதும், அவர் தொப்பி, முககவசம், கையுறை அணிந்து இருந்ததும் தெரியவந்தது. பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் படுக்கை அறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு பீரோவை திறந்து அதில் இருந்த நகை பெட்டிகளை அள்ளிய அவர், 'ஹாலில்' எடுத்து வந்து யாராவது வருகிறார்களா? என்று நோட்டமிட்டபடி நகைகளை அதன் பெட்டியில் இருந்து பிரித்து எடுத்தார். அதன்பிறகு நகைகளை அள்ளிக்கொண்டு அந்த நபர் பின்பக்கம் வழியாகவே தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது.

வலைவீச்சு

இந்த சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் பட்டப்பகலில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story