தேன்கனிக்கோட்டையில் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது: சாமி கும்பிட வந்த சிறுமி உள்பட 2 பேர் பலி-3 பேர் படுகாயம்


தேன்கனிக்கோட்டையில் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாமி கும்பிட வந்த சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவையொட்டி தர்கா அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். விழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து, பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது மழை காரணமாக அங்கு தனியார் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த 8 அடி உயர சுற்றுச்சுவர் திடீரென இடிந்தது. இந்த சுற்றுச்சுவரின் இடிபாடுகள் பேன்சி மற்றும் பொம்மை கடைகள் மீது விழுந்தது. இதில் கடையில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கினர்.

சிறுமி உள்பட 2 பேர் பலி

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த பேன்சி கடைக்காரர்கள் ஹாமியன் பேகம் (வயது 35), ரபிக்வுல் இஸ்லாம் (22), இசாத் அலி (35) மற்றும் தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் சகானா (11), வெங்கடேஷ் மகள் ஹேமாவதி (12) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அசாம் மாநில பெண் ஹாமியன் பேகம் பரிதாபமாக இறந்தார். இதேபோல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி மகள் சகானாவும் பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, பலியான சிறுமி சகானா, தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்ததும், விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது தோழியான 7-ம் வகுப்பு மாணவி ஹேமாவதியுடன் சாமி கும்பிட வந்தபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியானதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாமி கும்பிட சென்ற சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் தேன்கனிக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story