எருமப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்-போலீசார் விசாரணை


எருமப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் வேம்படி (வயது 70). இவர் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார். இவருடைய மகன் பாலசுப்பிரமணியம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேம்படி வெளியே சென்று வருவதாக மகன் பாலசுப்பிரமணியத்திடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

அவரை பாலசுப்பிரமணியம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சியில் தனியார் நர்சிங் கல்லூரி பின்புறம் உள்ள கிணற்றில் ஆண் உடல் மிதந்தது.

விசாரணை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எருமப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் நாமக்கல் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் வேம்படி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வேம்படி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேம்படி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story