எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்


எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
x

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்.

எண்ணூர்,

சென்னை எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், நண்டு, எரால்களும் கிடைக்கும். இந்த ஆற்றில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன்படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறியது. பின்னர் அது ஆறு முழுவதும் பரவி மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது. தொழிற்சாலை கழிவுநீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப்பார்த்த மீனவர்கள் அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

எண்ணூரை சுற்றியுள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் ரசாயனம் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் செத்து மிதப்பதாகவும் அந்த பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீன் செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story