எருமப்பட்டி அருகேமரத்தில் கார் மோதி டிரைவர் பலிரியல் எஸ்டேட் அதிபர் படுகாயம்


எருமப்பட்டி அருகேமரத்தில் கார் மோதி டிரைவர் பலிரியல் எஸ்டேட் அதிபர் படுகாயம்
x
தினத்தந்தி 21 July 2023 7:00 PM GMT (Updated: 21 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் பலியானார். ரியல் எஸ்டேட் அதிபர் படுகாயம் அடைந்தார்.

மரத்தில் மோதியது

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது சொந்த வேலை காரணமாக தனது காரில் தற்காலிக டிரைவர் சுரேஷ் (42) என்பவருடன் எருமப்பட்டி சென்று விட்டு கடந்த 19-ந் தேதி இரவு பொட்டிரெட்டிப்பட்டி புதூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது தனியார் மில் அருகே உள்ள வளைவில் வந்தபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் இடிபாடுகளில் சிக்கி 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

பலி

அப்போது ரோந்து பணியில் இருந்த எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் 2 பேரையும் மீட்டு தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் கந்தசாமி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுரேஷ் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சுரேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story