கர்ப்பிணி தூக்குப்போட்டு சாவு:கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் நடந்த பரிதாபம்


கர்ப்பிணி தூக்குப்போட்டு சாவு:கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் நடந்த பரிதாபம்
x
தினத்தந்தி 17 March 2023 7:00 PM GMT (Updated: 17 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திருப்பமாக கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் பரிதாப முடிவை எடுத்தது தெரியவந்தது.

கள்ளத்தொடர்பு

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள தெத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவருக்கும், ஜக்கசமுத்திரம் அருகே உள்ள முள்ளாபுதூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. சவுந்தர்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதற்கிடையே திருமணத்திற்கு முன்பு ஆனந்தனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சவுந்தர்யா கணவரிடம் அடிக்கடி இதுகுறித்து கேட்டு வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விரக்தி

மேலும் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பை வைத்ததை மறைத்து விட்டு தன்னை திருமணம் செய்து கொண்டதை நினைத்து சவுந்தர்யா வேதனை அடைந்ததாக தெரிகிறது. மேலும் திருமணத்துக்கு பின்னரும் ஆனந்தன் அந்த பெண்ணுடன் பேசி வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சவுந்தர்யா வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் சுவுந்தர்யா தற்கொலை குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story