கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்து விரட்டப்பட்டயானைகள் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி ஆந்திர மாநில எல்லையில் சோகம்


கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்து விரட்டப்பட்டயானைகள் தாக்கி பெண் உள்பட 2 பேர் பலி ஆந்திர மாநில எல்லையில் சோகம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அட்டகாசம் செய்த 2 ஆண் யானைகள் ஆந்திர மாநில எல்லைக்கு விரட்டப்பட்ட நிலையில் அங்கு பெண் உள்பட 2 பேரை அந்த யானைகள் தாக்கி கொன்றன.

ஆந்திரா நோக்கி சென்ற யானைகள்

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 ஆண் யானைகள் கடந்த 6-ந் தேதி, கிருஷ்ணகிரி நகரையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தேவசமுத்திரம் ஏரியில் உற்சாக குளியல் போட்டன. தொடர்ந்து 7-ந் தேதி அதிகாலை செல்லாண்டி நகர், கிருஷ்ணகிரி நகர், லைன்கொள்ளை வழியாக சாமந்தமலைக்கு சென்றன. யானைகள் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட தடுப்பு கம்பிகளையும் உடைத்து சென்றன. சாமந்தமலை விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த விவசாயி பெருமாள் என்பவர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்தார்.

தொடர்ந்து கீழ்பூங்குருத்தி அருகே மூலக்காடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினார்கள். அப்போது யானைகள் மகராஜகடை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை நாசம் செய்து, நாரலப்பள்ளி வழியாக ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

2 பேரை கொன்ற யானைகள்

நேற்று முன்தினம் இரவு ஆந்திர வனப்பகுதியையொட்டியுள்ள மொட்டுலுசேனு, சிக்கநத்தம், மல்லனூர் கிராமங்களில் புகுந்த அந்த இரு யானைகளும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்தன. இந்த இரண்டு யானைகளையும் ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மல்லனூர், பைபாளம், குசூர் பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பருத்திகொல்லையை சேர்ந்த உஷா (வயது 34) என்ற பெண் நேற்று அதிகாலை, 5.30 மணி அளவில் பெங்களூருவுக்கு கூலி வேலைக்கு செல்வதற்காக மல்லனூர் ெரயில் நிலையத்துக்கு நடந்து சென்றார். ரெயில் நிலையம் அருகே சென்ற அவரை அந்த யானைகள் தாக்கி கொன்றன. பின்னர் அதே பகுதி வழியாக வனப்பகுதிக்குள் செல்ல முயன்ற யானைகள், இயற்கை உபாதை கழிப்பதற்காக வந்த மல்லனூரை சேர்ந்த சிவலிங்கம் (65), என்பவரையும் தாக்கின. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 4 பேரை தாக்கி கொன்ற இந்த யானைகள் ஆந்திர மாநில எல்லையில் 2 பேரை நேற்று கொன்றுள்ளன. தமிழக எல்லையான பச்சூர், ஆந்திர எல்லையான மல்லனூர் இடையே சுற்றித்திரியும் இந்த இரு யானைகளையும் வனத்திற்குள் விரட்ட இரு மாநில வனத்துறையினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


Next Story