நாமகிரிப்பேட்டை அருகே பஸ் டிரைவர் மர்மசாவு; போலீசார் தீவிர விசாரணை


நாமகிரிப்பேட்டை அருகே பஸ் டிரைவர் மர்மசாவு; போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2023 7:00 PM GMT (Updated: 8 Jun 2023 2:07 AM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

நாமகிரிப்பேட்டை அருகே பஸ் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் டிரைவர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி கீர்த்தனா (30). இவர்களுக்கு ஜன ஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மோகன்ராஜ் வீட்டின் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் மனைவி, மகன்களும் தூங்கினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே மதுபாட்டில் இருந்தது. அவரது முதுகில் சிறிய அளவிலான காயம் இருந்தது. இதனால் மோகன்ராஜ் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர விசாரணை

அங்கு பிரேத பரிசோதனை நடந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மோகன்ராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர் வடிவேல் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தார். இதற்கிடையே மோகன்ராஜ் சம்பவத்தன்று மலையாளபட்டியை சேர்ந்த நண்பர் சரவணன் என்பவரது மொபட்டை எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார். அந்த மொபட்டில் சரவணன் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் ஒரு தங்க செயின் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் பள்ளி பஸ் டிரைவர் இறந்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story