கடன் தொல்லை: கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


கடன் தொல்லை: கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தக்கலை அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை,

கன்னியாகுமரி மாவட்டம்,குளச்சல் அருகே உள்ள சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சதாசிவம் தற்போது குடும்பத்துடன் தக்கலை அருகே உள்ள அமலாகான்வென்ட் தெருவில் வசித்து வந்தார்.இவர் ஊரில் பல பேரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அங்கிருந்து தக்கலை வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சதாசிவம் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது மனைவி எழுந்து பார்த்த போது சதாசிவம் அருகில் விஷமருந்து பாட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கணவரை எழுப்பி பார்த்துள்ளார்.அப்போது அவர் எழும்பாததால் இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார் சதாசிவத்தின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story