சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடிவு


சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க முடிவு
x

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

மீனம்பாக்கம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதால், சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பின்பு இந்தாண்டு கோடைகாலத்தில் சுற்றுலா செல்ல மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளன. இதனால் வெளிநாட்டு விமானங்களில் டிக்கெட்கள் முன்பதிவு அதிகரித்து வருகின்றன.

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல பயணிகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அந்தந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் பாரிஸ், பிராங்க்பார்ட், அபுதாபி, செயின்ட் டெனிஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க உள்ளது.

அதற்கான அறிவிப்புகளை விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி லுஃப்தான்சா விமான நிறுவனம், ஜெர்மனின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே விமான சேவைகளை இயக்கி வருகிறது.

ஏர் ஃபிரான்ஸ் விமான நிறுவனம், பாரிஸ்-சென்னை-பாரிஸ் இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வரும் விமான சேவையை, வாரத்தில் 5 நாட்களாக அதிகரித்துள்ளன. அபுதாபி-சென்னை-அபுதாபி இடையே எத்தியட் ஏர்லைன்ஸ் நிறுவனம், வாரத்தில் 7 விமான சேவைகளை இயக்கி வருகின்றன. இனி 14 விமான சேவைகளாக அதிகரிக்க இருக்கின்றன.

ஏர் ஆஸ்ட்ரல் விமான நிறுவனம், செயின்ட் டெனிஸ்-சென்னை-செயின் டென்னிஸ் இடையே வாரத்தில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வருகிறது. இனிமேல் வாரத்தில் 2 நாட்கள் சேவைகளை இயக்க இருக்கிறது. சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர் இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த பல ஆண்டுகளாக தினமும் இரவில் மட்டும், ஒரு சேவை இயக்கி வந்தது.

தற்போது இரவில் 2 சேவைகளும், பகலில் ஒரு சேவையும் என நாளொன்றுக்கு 3 சேவைகளை இயக்க தொடங்கி விட்டன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், கோலாலம்பூர்-சென்னை-கோலாலம்பூர் இடையே தினமும் இரவில் ஒரு சேவையை மட்டும் இயக்கி வந்தது. தற்போது பகலில் ஒரு சேவை என ஒரு நாளைக்கு 2 சேவைகளாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மார்ச் 26ம் தேதியில் இருந்து, சென்னை-அபுதாபி-சென்னை இடையே புதிய சர்வதேச விமானத்தை தினசரி விமானமாக இயக்க இருக்கிறது. அதைப்போல் சென்னை-மஸ்கட்-சென்னை இடையே மற்றொரு சர்வதேச விமானத்தை தினசரி விமானமாக இயக்க போவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அறிவித்துள்ளது.

ஒரே நாளில் 2 புதிய சர்வதேச விமான சேவைகளை அந்த நிறுவனம் தொடங்குகிறது. அதோடு தற்போது லண்டன்-சென்னை- லண்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், அந்த விமான நிறுவனமும் கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய நகரங்களை, சென்னையுடன் இணைக்கும் விதத்தில் புதிய வழித்தடங்களில் மேலும் பல விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புதிதாக கூடுதல் விமான சேவைகள் வெகு விரைவில் தொடங்க இருப்பதாகவும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Next Story