அயோத்தியில் பாபர் மசூதி கட்ட வலியுறுத்தி விழுப்புரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அயோத்தியில் பாபர் மசூதி கட்ட வலியுறுத்தி    விழுப்புரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:47 PM GMT)

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட வலியுறுத்தி விழுப்புரத்தில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்


விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பாபர் மசூதி கட்ட வேண்டும், பாபர்மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சையத்உஸ்மான் தொகுப்புரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஜிலுதீன் ஆகியோர் வரவேற்றனர். உலமா அணி செயலாளர் கலிலூர்ரஹ்மான், முன்னாள் மாநில பொருளாளர் அப்துல்ஹக்கீம், முன்னாள் மாநில துணை செயலாளர் முபாரக்அலிகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், மாவட்ட தலைவர் சீனிவாசக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் அப்பாஸ், நகரமன்ற கவுன்சிலர் ரியாஸ்அகமது, மாவட்ட துணை செயலாளர் அலிஅக்பர் உள்பட மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் அஷ்ரப்அலி நன்றி கூறினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி

இதேபோல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்லம்பாஷா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகீர்உசேன், மாவட்ட செயலாளர் வக்கீல் அலீம், பொருளாளர் சான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய செயலாளர் அப்துல்சத்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஏழுமலை, எஸ்.டி.பி.ஐ. கட்சி விழுப்புரம் பொதுச்செயலாளர் முகம்மது ரபி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு அயோத்தியில் பாபர் மசூதி கட்ட வலியுறுத்தியும், அனைத்து வழிபாட்டு தலங்களையும் மத்திய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் அக்பர்அலி நன்றி கூறினார்.


Next Story