மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு

மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அறச்சலூர்

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் 175 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அறச்சலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. ஆட்சியின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மணல், கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தமிழகத்தில் தடுத்து நிறுத்தக்கூடாது. அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஒன்றிய தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகர் உள்பட பலா் கலந்துகொண்டனர்.

காஞ்சிக்கோவில்

இதேபோல் பா.ஜ.க. சார்பில் காஞ்சிக்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் ராயல் கே.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கட சுப்பிரமணியம், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.முருகானந்த், சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. ஆட்சியை கண்டித்தும், காஞ்சிக்கோவில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல பொதுச்செயலாளர் யுவராஜ், துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, வர்த்தக அணி தலைவர் கல்யாண சுந்தரம், ஊடகப்பிரிவு தலைவர் வைத்தியலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி மற்றும் லக்காபுரம், சின்னியம்பாளையம், ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் ரெயின்போ கணபதி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நிரஞ்சனா சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோகிலவாணி, ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், துணைத்தலைவர் மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட வடக்கு மண்டல தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொண்டையம்பாளையம்

டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் டி.என்.பாளையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி ரதி ராமகிருஷ்ணன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய பொதுச்செயலாளர் சந்திரசேகர், பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்தோர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னிமலை

சென்னிமலை ஒன்றியத்தில் முகாசிபிடாரியூர், ஓட்டப்பாறை, எக்கட்டாம்பாளையம், எல்லைக்கிராமம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சென்னிமலை ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் வசந்தகுமார், மோகனசுந்தரம், மதன், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story