சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லுங்கியுடன் புகார் அளிக்க வந்தவருக்கு அனுமதி மறுப்பு


சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லுங்கியுடன் புகார் அளிக்க வந்தவருக்கு அனுமதி மறுப்பு
x

‘ஜெய்பீம்' படம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லுங்கியுடன் மனு அளிக்க வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி அணிந்து வந்த பிறகே மனுவை பெற்றனர்.

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன், 'ஜெய்பீம்' படம் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார்மனு அளிக்க வந்தார்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், லுங்கி, சட்டையுடன் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அதனால் அவர் அங்குள்ள பத்திரிகையாளர் அலுவலகம் அருகே செய்வதறியாது திகைத்து நின்றார்.

வேட்டி அணிந்தவுடன் அனுமதி

அதை கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், நடந்த விவரங்களை குளஞ்சியப்பனிடம் கேட்டறிந்தனர். பின்னர் அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி ஒன்றை வாங்கி குளஞ்சியப்பனிடம் கொடுத்தனர். அதை கட்டிக்கொண்ட பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து குளஞ்சியப்பன், இங்கு சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

அவர் அளித்த புகார்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உத்தரவு நிறைவேற்றப்படவில்லை

'நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். எனது கதையை திருடி 'ஜெய்பீம்' திரைப்படத்தை 2டி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வெளியிட்டிருப்பது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 9-வது சிட்டி கோர்ட்டில் முறையீடு அளித்தேன்.

அந்த முறையீட்டை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சாஸ்திரிநகர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

அனுமதி வேண்டும்

ஆகவே, கோர்ட்டு உத்தரவை போலீசார் நிறைவேற்றும் நிமிடம் வரை ஆகஸ்டு 15-ந்தேதி காலை 9 மணி முதல் சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்திருப்பதால், எனக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.'

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'ஜெய்பீம்' படம் தொடர்பாக லுங்கியுடன் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story