திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுப்பு: அரசு கல்லூரியில் சேர ஆணை வழங்கி கலெக்டர் நடவடிக்கை


திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுப்பு: அரசு கல்லூரியில் சேர ஆணை வழங்கி கலெக்டர் நடவடிக்கை
x

திருநங்கையாக மாறியதால் கல்லூரி படிப்பை தொடர அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து அரசு கல்லூரியில் சேர ஆணையை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் கடந்த 2018-2019-ம் ஆண்டு பொன்னேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாட பிரிவில் படித்தார். முதல் ஆண்டு படிக்கும் போது லோகேஷ் திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் 2-ம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் என்ஜினீயரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்ட இவர் 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 2022-2023 பட்டப்படிப்பு படிக்க ஆசைப்பட்ட லோகேஷ் திருநங்கையாக மாறியதால் தனது பெயரை ஓவியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கைக்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர நிர்ணயம் செய்த வயதை விட 5 நாட்கள் அதிகமாக இருந்ததால் சேர்க்கைக்கான வயது இல்லை என்று கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து இந்த சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் தமிழக அரசின் உயர்கல்வி துறையின் ஒப்புதலுடன் திருநங்கை ஓவியாவுக்கு கருணை அடிப்படையில் பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதவியல் படிக்க இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த கல்லூரியில் சேருவதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஓவியாவிடம் வழங்கினார்.


Next Story