போதிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை அழிக்கும் அவலம்


போதிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை அழிக்கும் அவலம்
x

உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாயிகள் டிராக்டர் ஏற்றி அழித்து வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் அதற்கு போதிய விலை இல்லை. இதனால் தக்காளி பழத்தை பறிக்கும் ஆட்களுக்கு கூட சம்பளம் கிடைப்பதில்லை. எனவே சாகுபடி செய்த தக்காளியை அழிக்கும் நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் உள்ள பாண்டுவழி தோட்டத்தை சேர்ந்த விவசாயி சேகர் கூறியதாவது:-

நிலத்திலேயே அழிப்பு

3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். இந்த 3 ஏக்கருக்கு உழுவதற்குரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.22-க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதனால் 3 ஏக்கருக்கு 1½ லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் விவசாய பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பல்லடம் பகுதியில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுவதால் குளிர்பதன கிடங்கு உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story