வருகிற 6-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியீடு


வருகிற 6-ந்தேதி முதல் மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் வெளியீடு
x

மதுரை ஐகோர்ட்டில் வருகிற 6-ந்தேதி முதல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

மதுரை,


வருகிற 6-ந் தேதி முதல், மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம் குறி்த்து, சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பொதுநல வழக்குகள், ஆட்கொணர்வு மனுக்கள், டிவிஷன் பெஞ்ச் விசாரிக்கும் அனைத்து கிரிமினல் அப்பீல் மற்றும் கிரிமினல் வழக்குகள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் உள்பட), 2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள ரிட் அப்பீல் மனுக்கள், சிவில் அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் பொதுநல வழக்குகளைத்தவிர பிற ரிட் மனுக்கள், 2018-ம் ஆண்டில் இருந்து தாக்கலான ரிட் அப்பீல் மனுக்கள், கிரிமினல் அவமதிப்பு வழக்குகள், அவமதிப்பு நடவடிக்கை கோரி தாக்கலான அப்பீல் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கின்றனர்.

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 2018-ம் ஆண்டில் இருந்து தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவை தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி வேல்முருகன், முதல் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார். நீதிபதி சேஷசாயி, 2010-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 2017-ம் ஆண்டில் இருந்து தாக்கலான பொது சிறு வழக்குகள், கனிமம் மற்றும் தாதுக்கள், நில சீர்திருத்தம், நில குத்தகை, நகர நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இதர நில சட்டங்கள் குறித்த வழக்குகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், சுதந்திரப்போராட்ட வீரர்கள் பென்சன் வழக்குகள், விவசாய உற்பத்தி சந்தை போன்ற துறைகள் சார்ந்த வழக்குகள், வேறு தனிநீதிபதி விசாரிக்காத ரிட் மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கிறார்.

நீதிபதி தாரணி, சிவில் சிறு அப்பீல் வழக்குகள், சிவில் 2-ம் நிலை சிறு வழக்குகளை விசாரிக்கிறார். நீதிபதி ஹேமலதா, 2009-ம் ஆண்டு வரை தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி நிர்மல்குமார், வரி தொடர்பான ரிட் மனுக்கள் (மோட்டார் வாகனங்கள் வரி, சுங்க வரி, ஏற்றுமதி-இறக்குமதி உள்பட), மத்திய கலால் வரி, மாநில வரி, வனம், தொழில்துறை, அறநிலையத்துறை மற்றும் வக்பு வாரிய வழக்குகளை விசாரிக்கிறார்.

நீதிபதி புகழேந்தி, 2017-ம் ஆண்டில் இருந்து தாக்கலான 2-ம் நிலை அப்பீல் மனுக்கள், சிவில் ரிவிஷன் மனுக்கள், சிவில் சிறு வழக்குகள், நிறுவன அப்பீல் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி சந்திரசேகரன்,2017-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள தொழிலாளர் மற்றும் சேவைத்துறை தொடர்பான மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி வி.சிவஞானம், குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் கிரிமினல் மனுக்கள், 2020-ம் ஆண்டில் இருந்து தாக்கலான ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி இளங்கோவன், முன்ஜாமீன், ஜாமீன் மனுக்கள், அவற்றில் திருத்தம், தளர்வு கோரும் மனுக்கள் மற்றும் இதுதொடர்பான அனைத்து மனுக்கள், கிரிமினல் அப்பீல் மனுக்கள் (பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் உள்பட), 2019-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் ரிவிஷன் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி முரளிசங்கர், சி.பி.ஐ., ஊழல் தடுப்புச்சட்ட வழக்குகள், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகள் 407, 482 ஆகியவற்றின்கீழ் தாக்கலாகும் கிரிமினல் வழக்குகள், 2019-ம் ஆண்டு வரை தாக்கலான ரிட் மனுக்கள், கிரிமினல் அப்பீல் மனுக்கள், 2020-ம் ஆண்டு வரை தாக்கலான கிரிமினல் ரிவிஷன் மனுக்களை விசாரிக்கிறார்.

நீதிபதி விஜயகுமார், 2016-ம் ஆண்டு வரை தாக்கலாகி நிலுவையில் உள்ள கனிமம்-தாதுக்கள், நிலச்சட்டம் தொடர்பான வழக்குகள், விவசாய சந்தை, சுதந்திரபோராட்ட வீரர் பென்சன், தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான வழக்குகள் மற்றும் 2016-ம் ஆண்டு வரை தாக்கலாகி வேறு தனிநீதிபதியிடம் பட்டியலிடப்படாத ரிட் மனுக்களை விசாரிக்கிறார்.


Next Story