பெண் சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது


பெண் சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

கடலூர் பகுதியை சேர்ந்த பெண் சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது.

கடலூர்

கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று திருப்பாதிரிப்புலியூர் அருகே ஓட்டேரி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (வயது 56) என்பவர், தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார், அவரை கைது செய்தனர்.

கைதான ரேணுகா மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 3 சாராய வழக்கும், கடலூர் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் 2 சாராய வழக்கும் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, ரேணுகாவை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தடுப்புக்காவல் சட்டத்தில் ரேணுகாவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாராய வியாபாரி ரேணுகாவிடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story