சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது


சாராய வியாபாரி மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 6:45 PM GMT)

சாராய வியாபாரி தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவத்தன்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் 6108 மதுபாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள், புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்த வீரப்பன் என்கிற பகலவன் (வயது 46), கத்திரி என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான பகலவன் மீது விழுப்புரம் மற்றும் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, பகலவனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், சாராய வியாபாரி பகலவனை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் சிறையில் இருந்த பகலவனிடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story