வடலூர் நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு


வடலூர் நகராட்சியில்    வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

வடலூர் நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தாா்.

கடலூர்


வடலூர்,

வடலூர் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சசிகலா வடலூருக்கு வருகை தந்தார். பின்னர் அவர், உழவர் சந்தை புனரமைப்பு பணிகள், புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ள பகுதி, நகராட்சி அருகே உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் மற்றும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது நகராட்சி தலைவர் சிவக்குமார், வடலூர் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் பகிர்மான குழாய் இணைப்புகளை ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நீர்த்தேக்க தொட்டிகளில் இணைக்க வேண்டும். நகராட்சிக்கு சாலை வசதி, வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர், அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் பானுமதி, பொறியாளர் சிவசங்கரன், துணை தலைவர் சுப்புராயலு, தி.மு.க. நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story