ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்; அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்


ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்; அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2023 8:30 PM GMT (Updated: 10 March 2023 8:31 PM GMT)

அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சிகளில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சிகளில் ரூ.3¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

சாலை அமைக்கும் பணி

தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பேரூராட்சிக்குட்பட்ட காக்கா தோப்பூரில் புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சுக்காம்பட்டியில் பொது சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கோட்டூர் ஆவாரம்பட்டி பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் தொடங்கி வைத்தார். இதேபோல் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பெண்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகையை இன்னும் 15 நாட்களுக்குள் முதல- அமைச்சர் அறிவித்து தொடங்கி வைப்பார். முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு விரைவில் மீண்டும் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கூட்டுறவு இணை பதிவாளர் காந்திநாதன், துணைப்பதிவாளர் அன்புக்கரசன் கூட்டுறவு சார்பதிவாளர் மணிகண்டன,் கூட்டுறவு விரிவாக்க அலுவலர் பொன்னுச்சாமி, திண்டுக்கல் மேற்கு தாலுகா தாசில்தார் ரமேஷ் பாபு, அகரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரி, திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத் தலைவர் ஜெயபால், அகரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாடிக்கொம்பு பேரூராட்சி

இதேபோல், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட 2 புதிய கட்டிடங்கள், மறவபட்டி குழந்தை ஏசு உயர்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட சுற்றுச்சுவரையும் அமைச்சர் திறந்து வைத்தார். மொத்தம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் மொத்தம் ரூ.1 கோடியே 76 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, துணை தலைவர் நாகப்பன், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சந்தனம்மாள், பேரூர் கழக செயலாளர் ராமலிங்கசுவாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் தனபாலன், தாடிக்கொம்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story