அரிமளம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்


அரிமளம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

அரிமளம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி வன்னியம்பட்டி ஊராட்சி நெய்வாசல்பட்டியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணிகளையும், மிரட்டுநிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிட பணிகளையும், சமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 4 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான கடனுதவிகளை வழங்கினார். அரிமளம் பேரூராட்சியில் அம்ரூட் 2.0 திட்டத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளையும், அரிமளம் தலைமையிட பொதுவினியோக திட்ட அங்காடியில் உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்தும், இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். கும்மங்குடி ஊராட்சியில், ரூ.6½ லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் மீனிக்கந்தா சமத்துவ சுடுகாட்டில் எரிமேடை, சுற்றுச்சுவர், அணுகுசாலை, மின் உலர்த்திகள் மற்றும் தண்ணீர் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கப்பள்ளிக்கு சமையற்கூடம் மற்றும் பொருட்கள் வைப்பறை கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலாமுத்து, உதவி கோட்டப் பொறியாளர் கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண ராஜா, அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story