அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகள்; கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


அரியலூரில் வளர்ச்சி திட்ட பணிகள்; கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x

அரியலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ரமேஷ் சந்த் மீனா, கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரியநாகலூர் ஊராட்சியில் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு, அமிர்தகுளம் இயக்கத்தின் கீழ் பிரதமரால் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட ரூ.7.26 லட்சம் மதிப்பீட்டில் சடையப்ப படையாச்சி ஏரி தூர் வாரி ஆழப்படுத்துதல் பணியினையும், மேலக்கருப்பூர்-பொய்யூரில் மருதையாறு ஆற்றில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணியினையும், அரியலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புறம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இருசுக்குட்டை மேம்பாட்டு பணியினையும், சின்னப்பட்டாக்காடு கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சின்னப்பட்டாக்காடு ஏரியில் வேளாண் பொறியியல் துறை எந்திரங்களை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சமப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ரூ.30 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் வண்ணாங்குளம் தூர் வாரப்பட்டுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். முன்னதாக அவர் பள்ளிக்கல்வி துறையின் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் திருவெங்கனூர் அரசு நடுநிலைப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story