தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது காஞ்சீபுரம் கோவில்களுக்கு படையெடுத்த பக்தர்கள்

தமிழ்புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் கோவில்களுக்கு பக்தர்கள் படையெடுத்து வந்ததால் கோவில்நகரம் விழாக்கோலம் பூண்டது. இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தமிழ்புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதையொட்டி காலை முதலே பொதுமக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி தங்களது குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடினர்.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்றதும், மகா சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி காமாட்சியம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்பாள் காட்சியளித்தார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையொட்டி காலை முதலே காமாட்சி அம்பாளை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களின் வருகையொட்டி பல்வேறு தடுப்புகள் அமைத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
அதேபோல் காஞ்சீபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களான ஏகாம்பரநாதர் திருக்கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், இளையனார்வேலூர் முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் படையெடுத்ததால் கோவில் நகரம் விழாக்கோலம் பூண்டது. இதையொட்டி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோவில் வளாகம் முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.






