பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 4 May 2023 10:45 PM GMT (Updated: 4 May 2023 10:46 PM GMT)

கூடலூர் கோழிபாலத்தில் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பறவை காவடிகள், பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் கோழிபாலத்தில் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் ஏராளமான பக்தர்கள் பறவை காவடிகள், பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன்

கூடலூர் கோழிப்பாலத்தில் முத்துமாரியம்மன் கோவில் விழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 9 மணிக்கு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பிள்ளையார் பாலம் ஆற்றங்கரையிலிருந்து அம்மனை குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பகல் 1 மணிக்கு பிள்ளையார் பாலம் ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவை காவடிகள், பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்து பஜாரை அடைந்தனர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேர் வீதி உலா

பின்னர் மாலை 3 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவிலில் இருந்து புறப்படும் திருத்தேர் பிள்ளையார் பாலம் சென்று அங்கிருந்து பள்ளி படி உள்பட முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்து அடைகிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் விசேஷ பூஜைகளும், 11 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. 7-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கரக ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கங்கை கரைக்கு சென்று அம்மனைகுடி விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story