பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்


பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
x

பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் ரெங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதியில் குறிப்பிட்ட நேரங்களில் மூலஸ்தான சேவை நடைபெற்றது. ரெங்கநாதரை தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேய சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் கோவிலில் திருப்பதி சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். மதியம் சிறப்பு பூஜை முடிந்ததும், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு மூலவர் வெண்ணைக்காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

பக்தர்கள் தரிசனம்

மேலும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், பொன்மலை அடிவாரத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோவில், கே.கே.நகர் இந்திராநகர் சீனிவாச பெருமாள் கோவில், பாலக்கரை நவநீத கிருஷ்ணன் கோவில், தாராநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில், நடுகுஜிலித்தெரு சீனிவாச பெருமாள் கோவில், தீரன்நகர் ஒப்பில்லா பெருமாள் கோவில், பொம்மசமுத்திரம் அக்ரஹாரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களிலும், பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதியிலும் நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

லால்குடி, துறையூர், தா.பேட்டை

லால்குடி அருகே அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை வடிவழகிய நம்பி ஸ்ரீதேவி, பூதேவியுடன் புஷ்ப கிரீடம் அலங்காரத்தில் எழுந்தருளினார். குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலிலும், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

துறையூர் பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், காது குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தா.பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, உத்தண்டம்பட்டி கிராமத்தில் உள்ள பூமாதேவி, நீலாதேவி சமேத கலியுக ராஜகோபால் சுவாமி, நீலியாம்பட்டி கிராமத்தில் தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோவில், அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


Next Story