2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x
தினத்தந்தி 13 Feb 2023 7:28 PM GMT (Updated: 14 Feb 2023 5:48 AM GMT)

2½ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்று வழங்கப்படுகிறது.

அரியலூர்

உலக மக்கள்தொகையில் 24 சதவீத பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடற்புழு தொற்றினால் இரும்புச்சத்து இழப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, விட்டமின் ஏ சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 21-ந்தேதி தேசிய குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. இந்த ஆண்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இன்றும், விடுபட்டவர்களுக்கு வருகிற 21-ந்தேதியும் நடைபெறும் முகாம்களில் அல்பென்சோல் மாத்திரை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். அரியலூர் மாவட்டதில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 741 பள்ளிகள் மற்றும் 774 அங்கன்வாடி மையங்கள் 15 கல்லூரிகள், 7 தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 168 பேருக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்கள் 54 ஆயிரத்து 465 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் 633 பேருக்கும் மாத்திரைகள் வழங்கப்படும். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் இந்த மாத்திரைகள் வழங்கப்படும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story