4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்


4 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
x

சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது என கலெக்டர் கூறினார்.

குடற்புழு நீக்க மாத்திரை

சிவகங்கை மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் விழா நடந்தது. சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ் முன்னிலை வகித்தார். பள்ளிக்குழு தலைவர் கண்ணப்பன் வரவேற்றார்.

விழாவில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:- இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 3,65,325 பேருக்கும், 20-ல் இருந்து-30 வயது உள்ள 67,637 பெண்களுக்கும் என மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் வீடுகள் தோறும் சென்று இம்மாத்திரை வழங்கப்பட உள்ளது.

கல்வித்திறன்

இந்த மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காளையார்கோவில் வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அருளானந்தம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல்அலுவலர் ஜெயமுருகன், பள்ளிக்குழு செயலர் நாகராஜன், நல்லாசிரியர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


முடிவில், தலைமை ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார்.


1 More update

Next Story