தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி: பல்லக்கு வீதி உலா தொடங்கியது


தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி: பல்லக்கு வீதி உலா தொடங்கியது
x

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கு வீதி உலா தொடங்கியது

மயிலாடுதுறை,

குருபூஜை விழா மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குரு பூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். இந்த விழாவின் 11-ம் நாள் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாளான நேற்று கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது. இந்த விழாவில் ஏற்கனவே ஆதீனங்களாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் ஆதீனம், நாற்காலி பல்லக்கில் அமர்ந்து குருமூர்த்தங்கள் எனப்படும் ஆதீனங்கள் நினைவிடங்களுக்கு சென்று வழிபாடு செய்வது ஆதீன மரபு ஆகும்.

அதன்படி நேற்று தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டின பிரவேசம் நிகழ்ச்சி இன்று இரவு 10 மணிக்கு தொடங்கியது. பல்லக்கில் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் பவனி வந்தார். பட்டின பிரவேசத்திற்காக மடம் மின் விளக்குகளால் வாழைமரம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். முன்னதாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


Next Story