இயங்காமல் மூடிகிடந்ததை கண்டித்து இ-சேவை மையம் முன்பு பொதுமக்கள் தர்ணா காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு


இயங்காமல் மூடிகிடந்ததை கண்டித்து  இ-சேவை மையம் முன்பு பொதுமக்கள் தர்ணா  காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு
x

காட்டுமன்னார்கோவிலில் இ-சேவை மையம் இயங்காமல் கிடந்ததை கண்டித்து அந்த அலுவலகத்தின் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் கடந்த சில தினங்களாக கம்ப்யூட்டர் சரியாக இயங்காமல் இருக்கிறது. அதேபோல் பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால், சேவை மையம் சரியான முறையில் இயங்காமல், மூடப்பட்டுள்ளது. எனவே இ-சேவை மையத்தை தேடி வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தர்ணா போராட்டம்

நேற்று காலை இந்த மையத்துக்கு மாணவர்கள் உள்பட பலர் வந்தனர். அப்போது அந்த மையம் மூடிக்கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாளை(அதாவது இன்று) முதல் இ-சேவை மையம் செயல்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நடவடிக்கை தேவை

தற்போது அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களது மேற்படிப்பை தொடரும் வகையில் வருமான சான்று, வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்களை பெறுவதற்காக ஏராளமானவர்கள் இந்த மையத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த இ-சேவை மையம் செயல்படவழிவகை செய்ய வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Next Story