கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்


கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

மல்லசமுத்திரம் அருகே கோவில் கும்பாபிஷேக விவகாரம்: பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடந்தது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

மல்லசமுத்திரம் அருகே செண்பகமா தேவி ஊராட்சி பகுதியில் அண்ணமார் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருதரப்பினர் இடையே திருவிழா மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதில் கருத்து வேறுபாடு உள்ளதாக தெரிகிறது. இது ெதாடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதால், தற்காலிகமாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்துள்ளது. இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே கும்பாபிஷேகத்தை அனைத்து தரப்பினரையும் இணைத்து நடத்த வலியுறுத்தியும், அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என தெரிவித்தும், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், அனைத்து மக்களையும் இணைத்து கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு சென்னை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு தரப்பினர் மட்டும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். அதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே இந்த பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர்.


Next Story