மாணவர் 'மனசு பெட்டி'...மனம் திறக்க வைத்ததா? ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து


மாணவர் மனசு பெட்டி...மனம் திறக்க வைத்ததா? ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து
x

பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள மாணவர் மனசு பெட்டி, மாணவர்களின் மனம் திறக்க வைத்ததா? என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

மாணவர் மனசு பெட்டி

கடந்த 2019-ம் ஆண்டு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்றில், தீர்ப்பு வழங்கிய மகிளா கோர்ட்டு நீதிபதி சில கருத்துகளை முன்வைத்தார். அதில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாகவும், சமீபத்தில் பள்ளி மாணவிகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் விதமாகவும் பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்ததுதான் இந்த 'மாணவர் மனசு பெட்டி'. அதுமட்டுமல்ல, பள்ளிகளில் உள்ள நிறைகுறைகள், கல்விப்பாதையில் மாணவ-மாணவிகளின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாகவும் இது ஏற்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 214 அரசு இடைநிலைப்பள்ளிகள், 6 ஆயிரத்து 177 மேல்நிலைப்பள்ளிகளில் இந்த பெட்டியை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 நிதியையும் கல்வித்துறை ஒதுக்கியது.

உடனுக்குடன் தீர்வு

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்த 'மாணவர் மனசு பெட்டி' தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் புகார் தெரிவிக்கும் மாணவ-மாணவிகளின் புகார்களை கண்காணிக்க தலைமை ஆசிரியர் தலைமையில், 2 ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாக பணியாளர், வெளி உறுப்பினர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 'மாணவர் மனசு பெட்டி'யில் விழும் புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ பிரித்து பார்த்து, அதில் மாணவ-மாணவிகள் தெரிவித்து இருப்பதை பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணுகின்றனர். சிறிய புகாரைக்கூட தட்டிக்கழிக்காமல் அனைத்தையும் சரி செய்கின்றனர்.

என்ன மாதிரியான புகார்கள்?

பெரும்பாலும் பள்ளி அளவில் நிவர்த்தி செய்யப்படக்கூடிய புகார்களைதான் மாணவ-மாணவிகள் அதிகம் தெரிவிப்பதாகவும், அதனை ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கிறது. அந்தவகையில், ஆசிரியர்கள் வீட்டு பாடம் அதிகம் கொடுக்கிறார்கள். அதை குறைத்து கொடுக்க சொல்லுங்கள்.... வகுப்பு தலைவன் என்னை அதிகம் திட்டுகிறான்... வகுப்பறையில் மின் விசிறி சரியாக சுழலுவதில்லை... உடற்கல்வி பாடவேளையில் வேறு வகுப்பு ஆசிரியர் பாடம் எடுப்பதை தவிர்க்கவேண்டும்... என்பது போன்ற வகுப்பறை சார்ந்த புகார்கள்தான் பெருமளவில் இடம்பெறுகின்றன.

இதுதவிர வகுப்பறையில் சில மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள்... தவறான வார்த்தைகளை சிலர் பேசுகிறார்கள்... ஒழுங்கீனமாக சில மாணவர்கள் நடக்கிறார்கள்... என்பது போன்ற நல்ல நோக்கத்துடனும் அவ்வாறு ஈடுபடுபவர்களின் பெயர்களை குறிப்பிட்டு புகார்களையும், பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது... கழிவறை கதவு உடைந்துள்ளது... குடிநீர் வசதி குறைவாக இருக்கிறது... செடிக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்கிறது... என்பது போன்ற பொதுநல புகார்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

'சானிட்டரி நாப்கின்' வையுங்கள்...

மேலும், வீட்டில் சொல்ல முடியாத சிலவற்றையும் மாணவ-மாணவிகள் மனம் திறந்து பெயருடன் குறிப்பிட்டு இந்த பெட்டியில் கடிதமாக எழுதி போடுகிறார்கள். சிலர் நேரடியாக ஆசிரியர்களிடமும் தெரிவிக்கிறார்கள். அந்த மாணவர்களை அழைத்து பேசுவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் முறைப்படி ஆசிரியர்கள் எடுத்துக்கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், என்னுடைய நண்பர் கடந்த சில நாட்களாக சரியாக பேசவில்லை. உடனே அழைத்து என்னிடம் பேச வையுங்கள், கல்வி சுற்றுலா அழைத்து செல்லுங்கள், சமையல் போட்டி நடத்துங்கள், ஓடி விளையாட அனுமதியுங்கள், பள்ளியில் 'சானிட்டரி நாப்கின்' எந்திரம் வையுங்கள் போன்றவையும் இந்த புகார் பெட்டியில் புகார்களாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காதல் கடிதம்

என்னதான் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதில் சில முகம் சுழிக்க வைக்கும் சம்பவங்கள் நிகழாமல் இருக்காது. அதன்படி, சமீபத்தில் ஒரு பள்ளியில் மாணவர் மனசு பெட்டியில் பெயர் குறிப்பிடாமல் காதல் கடிதம் போடப்பட்ட தகவல்களும் வெளியாகின.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?

எந்த நோக்கத்துக்காக இந்த 'மாணவர் மனசு பெட்டி' திட்டம் கொண்டு வரப்பட்டதோ? அது நிறைவேறி இருக்கிறதா? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது

கவுண்டம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பரணிதரன்:- மாணவர்கள் ஆசிரியர்களை சில விஷயங்களுக்கு அணுகுவதற்கு தயக்கமோ, அச்சமோ ஏற்படலாம். இதனை போக்கி நிறை, குறைகளை எளிதாக பள்ளி நிர்வாகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போடும் கடிதத்தை ஆசிரியர்கள் மத்தியில் எடுத்து அதனை படித்து, மாணவர்கள் சொல்லி இருக்கக்கூடிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பட்டியல் தயார் செய்து பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களிடம் பேசி, அந்த குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.

இந்த பெட்டியில் வரக்கூடிய கடிதங்கள் அனைத்தையும் சேகரித்து கோப்புகளில் வைத்துள்ளோம். தொடக்கப்பள்ளி என்பதால் சின்ன சின்ன வேடிக்கையான கடிதங்கள் வரும், அதனையும் பெற்று நாங்கள் நிவர்த்தி செய்து வருகிறோம். மாணவர்களுக்கு அச்சமின்றி நிறை, குறைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

பயனுள்ளதாக இருக்கிறது

கரூர், பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 12-ம் வகுப்பு மாணவி ஜெயபிரியா:-

மாணவர் மனசு பெட்டியில், மாணவர்களின் கருத்துகள், குறைகள் எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம். பெண்கள் பள்ளியில் மாணவர் மனசு பெட்டி என்பது மிக முக்கியமானது. எங்களது தேவைகளை நேரடியாக ஆசிரியர்களிடம் சொல்லமுடியாததால், பெயரை குறிப்பிடாமல் எங்களது கடிதம் மூலம் எங்களது தேவைகளை கேட்பதற்கு ஒரு நல்ல வழியாக உள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பல மாணவர்கள் இதனால் பலன் அடைந்துள்ளனர். மாணவர் மனசு பெட்டி குறித்து மாணவிகள் அனைவருக்கும் தெரியும். இதன்மூலம் நாங்கள் எங்களது தேவைகளை தெரிவித்துள்ளோ£ம். இதனை ஆசிரியர்கள் நிவர்த்தி செய்து உள்ளனர். நிறைய மாணவிகள் குறைகளை தெரிவிக்கும்பேது தங்களது பெயர்கள் தெரியக்கூடாது என நினைப்பார்கள் அவர்களுக்கு மாணவர் மனசு பெட்டி பயனுள்ளதாக இருக்கிறது.

குறைகள் நிவர்த்தி

கரூர், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 11-ம் வகுப்பு மாணவன் ஹரீஷ்:- குறைகள் எதுவும் இருந்தால், கடிதம் மூலம் தெரிவிக்க பயன்படுகிறது. மேலும் பள்ளியில் உள்ள குறைகள் குறித்து தெரிவிக்க முடியும். மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை குறித்து தெரிவிக்க பயன் உள்ளதாக இருக்கிறது.

ஆசிரியர்களிடம் சொல்ல தயங்குகின்ற குறைகளை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இதன்மூலம் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுப்பார்கள்

கவுண்டம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5-ம் வகுப்பு மாணவி லித்திகா:- மாணவர் மனசு பெட்டியில் குறைகள் இருந்தால் அதில் கடிதம் எழுதி போடுவோம்.

அதன்மீது ஆசிரியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். எங்கள் குறைகள் பூர்த்தியடைந்ததும், நாங்கள் நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளோம். இந்த பெட்டி வைத்துள்ளது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

சட்ட நடவடிக்கை

வெள்ளியணை பகுதி காணியாளம்பட்டி அருகே உள்ள செல்லாண்டி புரத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார்:-

மாணவர் மனசு திட்டம் வரவேற்கதக்க ஒன்றுதான். பள்ளி செல்லும் மாணவிகள் நன்றாக படித்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகதான் பெற்றோர்கள் அனுப்புகிறோம். மாணவிகளுக்கு எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். அதை நோக்கி பயணிக்கும் வேளையில் சில இடங்களில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் சொல்ல முடியாத நிலையில் மனவேதனையில் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை செய்திகள் மூலம் அறிகிறோம். இத்திட்டம் பெயரளவில் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணத்தை மாணவிகளுக்கு ஏற்படுத்தினால், அவர்கள் தைரியமாக மாணவர் மனசு புகார் பெட்டியில் புகாரை தெரிவிப்பார்கள். அப்படி மாணவிகள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


Next Story