மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்


மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
x

மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கி கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.

ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, 'ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

மிகுந்த சிரமம்

பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த ஜெயராமன்:- ஏற்கனவே மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கக்கூறி மின் வாரியம் கட்டாயப்படுத்தி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கிறது. பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் இணையதளம் மூலம் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க சென்றாலும், அங்கேயும் இணையதள(சர்வர்) கோளாறால் இணைக்க முடியவில்லை. இதற்கு கால அவகாசம் போதாது. இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இதனால் மின் நுகர்வோருக்கு என்ன லாபம் என்பதை மின்வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும்.

கூடுதல் கால அவகாசம்

வேப்பந்தட்டை தாலுகா, விசுவக்குடியை சேர்ந்த முஹம்மது ஜகரிய்யா:- ஒரு தெளிவான வழிகாட்டுதலுடன் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறைகளை மின்வாரியம் மேற்கொண்டிருக்கலாம். கூடுதல் கால அவகாசம் கொடுத்து மக்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல், இப்பணியை செய்திட வேண்டும். மின் கட்டணம் கணக்கீடு செய்ய வரும் ஊழியர்கள் மூலம் உடனடியாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story