தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

சாலையின் நடுவே கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள தார் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடந்தது. இந்த சாலை பல வீடுகளுக்கும், தோட்டங்கள், மயானத்திற்கும் செல்லும் வழியாக உள்ளது. தற்போது சாலை சீரமைப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜல்லிகற்கள் கொண்டு வந்து சாலையில் முழுமையாக கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக பொதுமக்கள் தோட்டங்களுக்கோ, மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கோ சென்று வரமுடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே சாலையில் கொட்டி குவிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கற்களை உடனே ஓரமாக அகற்றி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு பாலன் நகரில் இருக்கும் ரெங்கசாமி வீதியில் பால்வாடி எதிர்ப்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பத்தை நட்டு அதன் வழியே அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கியுள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், 9ஏ நத்தம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கீழகாந்தி நகர் பகுதி மெயின் சாலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான நிலையில் தொங்கும் மின் கம்பிகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தொங்கும் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி தெரிவித்தபோது மின் கம்பிகள் உரசாமல் இருப்பதற்கு குச்சி கட்டி இருந்த நிலையில் அந்த குச்சியும் உடைந்து விட்டது. இதனால் எந்நேரமும் ஆபத்தும் ஏற்படும் நிலை உள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் உடன் கவனிக்க வேண்டுகிறோம்.

குணசேகரன், கீழகாந்திநகர்.


Next Story