தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:00 PM GMT (Updated: 4 Oct 2023 7:01 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

நாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது குறுக்கிடுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கி, எஸ்.புதூர்.

சேதமடைந்த சாலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, மானாமதுரை.

குரங்குகள் அட்டகாசம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு உட்பட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள பொருட்களை குரங்குகள் எடுத்து செல்வதுடன், பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சிங்கம்புணரி.

குடிநீர் குழாய் உடைப்பு

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா மறவமங்கலம் கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காளையார்கோவில்.

குளியல் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சி கழுங்குப்பட்டி கிராமம் கண்மாய் அருகில் மயானக்கரை குளியல் தொட்டி 2 வருடத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை உபயோகத்தில் இல்லை. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?்.

பொதுமக்கள், திருப்புவனம்.


Next Story