நீ ரெடியாயிட்டியா? கற்பழிப்பு காட்சியில் நடிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய இயக்குனர் ; வைரலாகும் ஆடியோ


நீ ரெடியாயிட்டியா? கற்பழிப்பு காட்சியில் நடிக்க இளம்பெண்ணை வற்புறுத்திய இயக்குனர் ; வைரலாகும் ஆடியோ
x

நீ ரெடியாயிட்டியா? ரேப் சீன்ல நடிப்பியா....? கற்பழிப்பு காட்சியில் நடிக்க இளம்பெண்ணை செல்போனில் வற்புறுத்திய இயக்குனர் வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்திரியன் (வயது 38). சினிமா பட இயக்குனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'நோ' என்ற பெயரில் புதிதாக சினிமா படம் எடுப்பதாகவும், அதற்கு துணை நடிகைகள் தேவை என்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தினார்.

இதை நம்பி ஏராளமான பெண்கள் அவரை அணுகி உள்ளனர். அப்போது அவர் இளம்பெண்களிடம் சினிமா ஆசையை தூண்டி விட்டு அவர்களை ஆபாசமாக படம் எடுத்து சீரழிப்பதாக இரும்பாலையை சேர்ந்த கனகா என்பவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இயக்குனர் வேல்சத்திரியன், அவருடைய பெண் உதவியாளரான ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர். இந்த நிலையில் இயக்குனர் வேல்சத்திரியன் மீது ஏராளமான பெண்கள் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.

புகார்கள் குவிவதால், அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க நேரில் வருமாறு அழைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரிடம் இயக்குனர் வேல்சத்திரியன் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் உங்க மகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளை நல்ல இடத்துக்கு கொண்டு போகனும். நீங்க தப்பா நினைக்காதீங்க. அவளை ரெடி பண்ணணும். நானே ரெடி பண்ணவா என கேட்கிறார். அதற்கு இளம் பெண்ணின் தாயார், நீங்களே ரெடி பண்ணுங்க. உங்க கிட்ட ஒப்படைச்சாச்சு என்கிறார்.

தொடர்ந்து இயக்குனர் ரெடி பண்ணும் போது டச்சப் உள்பட எல்லாமே இருக்கும், அவளிடம் உள்ள பயம் கூச்சத்தை போக்க வேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறாக அந்த உரையாடல் தொடர்கிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் இயக்குனர் வேல் சத்ரியன் வேறு ஒரு இளம்பெண்ணுடன் பேசுகிறார். அதில் அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுக்க கற்பழிப்பு காட்சியில் நடிக்க சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த உரையாடல் வருமாறு:-

இயக்குனர்: உங்கள் டாடி என்ன சொன்னாரு, நீ போனதுக்கு அப்புறம் போன் பண்ணி என்ன ஏதுன்னு என்னிடம் நொய், நொய்னு கேட்டாரு.

இளம்பெண்: போயிட்டு பத்திரமா வான்னு சொன்னாரு.

இயக்குனர்: நீ ரெடியாயிட்டியா? என்ன சீன் கொடுத்தாலும் நடிப்பியா, ரொமான்ஸ், கிஸ்சு, லிப் டு லிப்பு... அதெப்படி கரெக்டா பண்ணுவ, ரேப் சீன்ல நடிப்பியா.

இளம்பெண்: ரேப் சீனில் நடிக்க மாட்டேன்.

இயக்குனர்: எல்லாத்துக்கும் ம்ம்னு சொன்ன இது மட்டும் வேணாமா... நான் பண்ணட்டுமா ?

இப்படியாக அந்த உரையாடல் முடிகிறது. இதே போல மயக்கி பேசி பல பெண்களை அவர் ஆபாச படம் எடுத்து சீரழித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசார் விசாரணையில், அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுக்கும் போது உதவியாளர் ஜெயஜோதியை தனது மனைவி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு வரும் பெண்களிடமும் உதவியாளரை தனது மனைவி என்றே கூறி வந்துள்ளார்.

இதற்கிடையே சிறையில் உள்ள வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைக்கும் என்பதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story