கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு; சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது


கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு; சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
x

ஆலங்குடி அருகே கும்பாபிஷேகம் நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

புதுக்கோட்டை

கருத்து வேறுபாடு

ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் வடக்கு வட்டம் பட்டவையனார், கொம்புக்காரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் ஏற்படும் சூழல் இருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதாக கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரையடுத்து இருதரப்பினர் இடையே சமாதான பேச்சுவார்த்தை ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாசில்தார் செந்தில்நாயகி தலைமை தாங்கினார். கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, தலைமையிடத்து துணை தாசில்தார் பாலகோபாலன், கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி மற்றும் இருதரப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் புறக்கணிப்பு

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், மற்றொரு பிரிவினர் தங்களுடைய குலதெய்வங்களான கருப்பர் மற்றும் சன்னாசி ஆகிய தெய்வங்களுக்கு தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கரை தொடர்பான பிரச்சினையை கோர்ட்டு மூலம் பரிகாரம் தேடிக்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் இருதரப்பினரிடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.விடம் மேல்முறையீடு செய்வது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஒருபிரிவினர் ஒத்துக்கொண்டு கையொப்பமிட்டனர். மற்றொரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் அறிவித்தபடி கும்பாபிஷேகம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story