அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா?


அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறதா? என தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

'காத்துட்டா இருந்தாலும், அது கவர்மெண்ட் துட்டா இருக்கணும்', 'அரசாங்க உத்தியோகம்னா, சும்மாயில்லே?'

-இது போன்ற வாய்மொழிகள் இன்னமும் கிராமங்களில் வலம் வருகின்றன.

பணி பாதுகாப்பு, சுதந்திரம், கணிசமான சம்பளம், பதவி உயர்வுக்கான வாய்ப்பு, ஓய்வூதியம் போன்ற காரணிகளே, பொதுவாக ஒருவரை அரசு வேலைக்கு ஈர்ப்பதாகப் பார்க்கப்படுகிறது.

ஒருகாலத்தில் அரசுத்துறைகளில் இருக்கும் பணிகளுக்கு ஆட்களை கூப்பிட்டு, கூப்பிட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலப்போக்கில் கல்வியறிவு அதிகரித்து, படித்து முடிக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி.

அதன் பின்னர், தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியில் சேர்க்கும் முறை கடந்த 1929-ம் ஆண்டு வாக்கில் இருந்து தொடங்கி இருக்கிறது. முதலில் இந்த அமைப்புக்கு மெட்ராஸ் தேர்வாணையம் என்ற பெயர் இருந்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு, 1957-ம் ஆண்டில் மெட்ராஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் என்றும், அதனைத்தொடர்ந்து, சென்னை மாகாணம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டபோது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) என்றும் மாறியது.

1954-ம் ஆண்டில் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை மற்றும் நடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆணையம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலமாகவே அரசுத்துறைகளில் அடிமட்ட அளவில் இருந்து உயர்மட்ட அளவில், பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் குரூப்-1, 2, 2ஏ, 3, 4 என பிரிவுகளாக பிரித்து நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுபவர்களின் காலிப்பணியிடங்கள், புதிதாக துறைகளில் தோற்றுவிக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அந்தந்த துறைகள் அளிக்கும் பட்டியல்களை கொண்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுத்திட்ட அட்டவணையை வெளியிட்டு வருகிறது.

அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகளை வெளியிடுவதோடு, அதற்காக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு என அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, அந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்களை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செய்து பணி வழங்குகிறது.

தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கு ஏற்ப தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குறுக்குப்பாதைகளை தேடுபவர்கள் எங்கேதான் இல்லை? என்று சொல்லும் வகையில், இந்தத்தேர்வு முறைகளிலும் சிலர் முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அரங்கேறியது என்பது, மறுக்க முடியாத உண்மை.

வயது விலக்கு

அந்த சுவடுகள் மீண்டும் டி.என்.பி.எஸ்.சி. மீது பதிந்துவிடக்கூடாது என்ற நோக்கில், அதனை பொறுப்பேற்று முன்னெடுத்து செல்லும் அதிகாரிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது அதுபோன்ற முறைகேடுகள் பற்றிய எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இடம் கொடுத்துவிடாதபடி, ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வை நடத்தி வருகின்றனர்.

இதில் குரூப்-4, குரூப்-2, 2ஏ ஆகிய பிரிவுகளில் தான் அதிகமான பணியிடங்களும் இருக்கும் அதிகமான போட்டிகளும் இருக்கும்.

உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-4 பணியிடங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இது பெருமையா? என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல முடியும். ஏனென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேர் காத்துக்கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக எதிர்பார்த்தபடி பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாததால், அதிகபட்ச வயது வரம்பை கடந்தவர்களுக்காக, 2 ஆண்டுகள் வயது விலக்கு அளிக்கப்பட்டது. இந்த சலுகைகளை பெற்றவர்களுக்கு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களில் தேர்வு ஆகுவதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

அதிர்ச்சி அளிக்கிறது

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு, டி.என்.பி.எஸ்.சி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட ஆண்டுத்திட்ட போட்டித்தேர்வு அட்டவணை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய குரூப்-2, 2ஏ, 3ஏ பதவிகளுக்கான அறிவிப்பு இல்லாதது, குரூப்-4 பணியிடங்களுக்கான காலி இடங்கள் எவ்வளவு? என்ற விவரங்கள் தெரிவிக்காதது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன.

குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பரில் முதல் நிலை, 2024 ஜூலையில் முதன்மை, டிசம்பரில் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் எத்தனை பணியிடங்கள் என்ற விவரங்கள் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டுகளில் இருந்து பார்க்கும்போது, ஆண்டுக்கு 23 ஆயிரம், 10 ஆயிரம், 9 ஆயிரம், 8 ஆயிரம் காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலைமாறி, தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் என்ற அளவிலேயே பணியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன.

சோளப்பொரி

இது யானைப்பசிக்கு சோளப்பொரி போல் அல்லவா தெரிகிறது? வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்கு, ஆயிரத்தில் பணியிடங்கள் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?

அதிலும் இந்த ஆண்டு அறிவிப்பில் இதுவரை 1,754 காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையில் இடம்பெற்றிருப்பது, அரசுப்பணிகளில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

இதுபற்றி தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

மண்டப சாலை பட்டதாரி அனுசியா:-

கணினி அறிவியல் பட்டம் பெற்று அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெறும் நம்பிக்கையோடு படித்து வருகிறேன். ஆனாலும் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு 2024-ம் ஆண்டு தான் நடைபெறும் என அறிவித்துள்ளது. என்னை போன்று முதல் முறையாக தேர்வு எழுத பயிற்சி பெற்று வருபவர்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் நிலை உள்ளது. ஆனாலும் காலி பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடவில்லை. அறிவித்தால் நம்பிக்கையோடு ஊக்கத்தோடு பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படும்.

ஏமாற்றம்

என்ஜினீயரிங் பட்டதாரி சங்கீத பாரதி:-

நான் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளேன். தற்போதைய நிலையில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு மிக குறைவாக உள்ளதால் அரசு பணியில் சேர வாய்ப்பு தேடும் நிலையில் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதி வருகிறேன். ஏற்கனவே இருமுறை குரூப்-4 தேர்வு, ஒருமுறை குரூப்-2 தேர்வு எழுதி உள்ளேன். ஒரு சில மதிப்பெண்களில் வாய்ப்பு இழந்து விட்டதால் மீண்டும் தேர்வு எழுத பயிற்சி பெறுகிறேன். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு 2024-ம் ஆண்டு தான் நடைபெறும் என அறிவித்துள்ளது. இது என்னை போன்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

பயிற்சியாளர் ராகவேந்திரன்:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வினை 2024-ம் ஆண்டு நடத்துவோம் என அறிவித்துள்ளது. 1½ ஆண்டுகளுக்கு முன்பு இதுபற்றி தகவல் தெரிவித்தது ஏன்? என்று தெரியவில்லை. இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது. எனவே அரசு தேர்வாணையம் குரூப்-4 தேர்வினை முன்கூட்டியே நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

விரைவில் நடத்த வேண்டும்

கல்வியாளர் டாக்டர் வைரமுத்துவேல்:- அரசு பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்கள் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் தற்போதும் தேர்வுகள் 1½ ஆண்டுகள் தள்ளிப் போவது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் நிலை உள்ளது. மேலும் ஏற்கனவே 1½ லட்சம் அரசு காலி பணியிடங்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அரசு சார்பு நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்துக்கழகம், ஆவின் ஆகியவற்றிற்கும் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கும் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோரையும் சேர்த்து 2023-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வினை மிகவும் காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வயது மூப்பு

சிவகாசி மதன்குமார்:- அரசு குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3ஏ போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்பு இன்னும் அறிவிக்கவில்லை. இந்த தேர்வுகளுக்காக என்னை போல் பல லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகிறோம். ஆனால் தேர்வுக்கான அட்டவணையை அரசு அறிவிக்கவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அரசுத்துறைகளில் மாதந்தோறும் பல ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுகிறார்கள். அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

ராஜபாளையம் கல்லூரி பேராசிரியர் கந்தசாமி:-

கல்லூரிகளில் படித்து முடித்த பெரும்பாலான இளைஞர்கள் இன்றைக்கு அரசு தேர்வு எழுதி பணிபுரியவே அதிகம் விரும்புகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பணித்தேர்வு எழுதும் சூழ்நிலையில், நூற்றுக்கணக்கில் மட்டுமே அரசு காலிப்பணியிடம் அறிவிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே அரசுப்பணி கனவு நினைவாகிறது. மற்றவர்கள் சில ஆண்டுகள் படித்து தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் அடைந்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை தேடும் நிலையும் உள்ளது. அதேபோன்று அரசு காலிப்பணியிடம் குறித்த விளக்கவுரையும் அளித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுப் பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக மாற்றி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதால், ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாமல் இருக்கிறது என்றும், இனி வரக்கூடிய நாட்களில் 60 வயதை எட்டுபவர்கள் பணி இடங்கள் காலியிடங்களாக கருதி பட்டியல் வரும். அவ்வாறு வரும்போது, அந்த காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் சொல்லப்படுகிறது.



Next Story