ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
x

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றங்கரையில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அவை எக்காலத்தை சேர்ந்தவை என்பதை கண்டறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

பழமையான கல்வெட்டு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, காரணி சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றங்கரையில் நேற்று பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள பெரியோர்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் ஊத்துக்கோட்டையில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்

வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சுமார் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட மிகவும் பழமையான கல்வெட்டை ஆராய்ந்தனர். கல்வெட்டில் கால பைரவர் உருவம் உள்ளதை உறுதி செய்தனர். இந்தக் கால பைரவர் உருவத்தின் கீழ் சில எழுத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அது எந்த மொழியை சேர்ந்தது என்று தெரியவில்லை.

இதுகுறித்து அவர்கள் சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்த பிறகுதான் கல்வெட்டு எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். கல்வெட்டு தற்போது ஆரணி ஆற்றின் கரையில் பத்திரமாக வை க்கப்பட்டுள்ளது. பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்த்து வழிபட்டு செல்கின்றனர்.


Next Story