விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
கொற்றவை சிற்பம்
விழுப்புரம் அருகே செஞ்சி சாலையில் அமைந்துள்ளது நேமூர் கிராமம். இப்பகுதியில் பழமையான சிற்பம் காணப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன், திருவாமாத்தூர் கண.சரவணக்குமார் ஆகியோர் களஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது நேமூர் ஏரிக்கரையில் துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தது ஆகும். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது
துர்க்கை என வணங்கப்பட்டு வரும் கொற்றவை வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு இருந்து வருவதாகும். அச்சம் தரத்தக்க தெய்வமாக, போருக்கான அதன் வெற்றிக்கான தெய்வமாக கொற்றவை வணங்கப்பட்டாள்.
நேமூர் ஏரிக்கரையில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பம் கி.பி. 8-9-ம் நூற்றாண்டை (பல்லவர் காலம்) சேர்ந்தது ஆகும். சுமார் 6 அடி உயரமுள்ள பலகைக்கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை தக்க ஆயுதங்களை ஏந்தி, எருமைத்தலையின் மீது நிற்கிறாள். கொற்றவையின் இடது கரத்தின் கீழே மான் காட்டப்பட்டு இருக்கிறது. சிலப்பதிகாரம் சொல்லும் பாய்கலப் பாவையை நினைவூட்டுகிறது. கால்களின் இரண்டு பக்கங்களிலும் வணங்கி பூஜை செய்யும் நிலையில் அடியவர் இருவர் காட்டப்பட்டு இருக்கின்றனர்.
கொற்றவை சிற்பத்தின் அருகிலேயே ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும் 6 முகங்களை கொண்ட சிற்பம் தனிக்கல்லில் காணப்படுகிறது. இது முருகனை குறிப்பதாகும். இந்த சிற்பமும் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாகும். நேமூர் ஏரி பகுதியில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தடயங்கள் கிடைக்கக்கூடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






