பழமையான அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுப்பு


பழமையான அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுப்பு
x

நரிக்குடி அருகே பழமையான அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி

நரிக்குடி அருகே பழமையான அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வு

நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர்களான தாமரைக்கண்ணன், ராஜபாண்டி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவியுடன் நேரில் சென்று அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிலைகள் 500 ஆண்டுகள் பழமையான விஜயநகர பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அடுக்கு நிலைநடுகல் வகை நடுகற்கள் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் தியாகத்தை போற்றி அவர்கள் எந்த படைப்பிரிவினை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்ற விவர குறிப்போடு எடுக்கப்படும் ஒரு நடுகல் மரபாகும்.

முரசு சிற்பம்

தற்போது நாங்கள் கண்டறிந்த அடுக்கு நிலை நடுகற்கள் பிள்ளையார்குளம் கிராமத்தில் 3 கற்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு சதிகல்லும், வில்வீரன் சிற்பமும் இடம்பெற்றுள்ளன.

இங்கு காணப்படும் அடுக்கு நிலை நடுகல் 5 அடி உயரமும், 2 அடி அகலமும், ¾ அடி தடிமனும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செக்கப்பட்டுள்ளது. இந்த கல்லில் 3 புறம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பக்கத்தில் பல்லக்கில் ஒருவர் வணங்கியபடி அமர்ந்துள்ளார். இரு பல்லக்குத்தூக்கிகள் பல்லக்கை சுமந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இவர் அரசருக்கு இணையானவராக கருதலாம். இதற்கு கீழ் அடுக்கில் ஒருவர் காளை மீது அமர்ந்து முரசு கொட்டும்படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

வளைந்த கொம்புகள்

காளைமீது அமர்ந்து முரசு ஒலிக்கும் சிற்பம் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். காளையின் கழுத்தில் மணிகள் இடம்பெற்றுள்ளது. நன்கு நீண்ட வளைந்த கொம்புகளும் காணப்படுகிறது.

காளையின் முன்பாக இருவர் எக்காளம் கொண்டு ஒலி எழுப்பியவாறு செல்லும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் 2-வது பக்கத்தில் மேலிருந்து கீழாக 5 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் வில்வீரன் ஒருவன் வில்லில் அம்பை வைத்து எய்யுமாறு செதுக்கப்பட்டுள்ளது. வில்லிற்க்கு மேலும் கீழுமாக இரண்டு மாடுகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story