மேட்டூர் அனல் மின் நிலையப்பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


மேட்டூர் அனல் மின் நிலையப்பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

மேட்டூர் அனல் மின் நிலையப்பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டரை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் "மனுதாரர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டனர்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் விளக்கவில்லை. டெண்டர் நிபந்தனைகளை பொறுத்தவரை அது அரசின் கொள்கை முடிவு. டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாக டெண்டர் நிபந்தனைகள் இல்லை. எனவே இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story