குழந்தையை அழைத்துச்சென்றதில் தகராறு: ஒருவரையொருவர் மாறி, மாறி வெட்டிக்கொண்ட மாமனார்-மருமகன்


குழந்தையை அழைத்துச்சென்றதில் தகராறு: ஒருவரையொருவர் மாறி, மாறி வெட்டிக்கொண்ட மாமனார்-மருமகன்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே குழந்தையை அழைத்துச்சென்ற தகராறில் மாமனாரும், மருமகனும் ஒருவரையொருவர் மாறி, மாறி வெட்டிக்கொண்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 56), பனை தொழிலாளி. இவர் தனது மகளை அதே பகுதியில் பனை தொழில் செய்து வரும் தனது உறவுக்காரரான தர்மர் மகன் ஆதிநாராயணன் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த தம்பதியின் மகன் தருண் (7).

நேற்று முன்தினம் மகள் வீட்டிற்கு சென்ற முத்துக்குட்டி அங்கிருந்த பேரன் தருணை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இதை அறியாமல் ஆதிநாராயணன் தனது மகனை தேடி அங்கும் இங்குமாக அலைந்துள்ளார்.

கோவிலில் மகன் இருப்பதை அறிந்த அவர் அங்கு சென்று, மாமனாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், ஆத்திரம் அடங்காத ஆதிநாராயணன் தனது வீட்டில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு முத்துக்குட்டி வீட்டிற்குச்சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே முத்துக்குட்டியை கத்தியால் வெட்டியதாகவும், பதிலுக்கு முத்துக்குட்டி அரிவாளால் ஆதிநாராயணனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து உறவினர்கள் அவர்களை மீட்டு, முத்துக்குட்டியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், ஆதிநாராயணனை அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குழந்தையை அழைத்துச்சென்ற தகராறில் மாமனாரும், மருமகனும் மாறி மாறி வெட்டிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story