மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரிய அளவில் பதவி ஏற்பு விழா நடத்தினால் தகுதி நீக்கம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு


மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரிய அளவில் பதவி ஏற்பு விழா நடத்தினால் தகுதி நீக்கம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

அறங்காவலர்களை தேர்வு செய்யும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை பெரிய அளவில் நடத்தினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், அறநிலையத்துறை ஆணையர், சிறப்பு பணி அதிகாரி ஆகியோரை நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சிறப்பு பணி அதிகாரியான ஜெ.குமரகுருபரன், ஆணையர் கே.வி.முரளீதரன் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகளிடம், ''மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 473 கோவில்களில் அறங்காவலர்கள் பதவிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 ஆயிரத்து 313 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 ஆயிரத்து 187 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் அறங்காவலர்களை தேர்வு செய்ய மாவட்டக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின் விவரங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்'' என்று அதிகாரிகள் இருவரும் கூறினர்.

அப்போது, அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்டக் குழுக்களுக்கு நியமிக்கப்படுபவர்கள் பெரிய அளவில் பதவியேற்பு விழா நடத்தி பதவிப்பிரமாணம் செய்து கொள்வதாகவும், அவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்றும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''மாவட்டக் குழுக்களுக்கு நியமனம் செய்யப்படுபவர்களின் விவரங்களோடு, அறங்காவலர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பெயர் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்படி பதிவேற்றம் செய்தால்தான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் பொதுமக்களால் தங்கள் கருத்துக்களை கூற முடியும்'' என்றனர்.

இதை தொடர்ந்து நீதிபதிகள், ''மாவட்டக்குழுக்களில் அரசியல் சார்புடையவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவை பெரிய அளவில் நடத்தினால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story